Thursday, November 23, 2017

நின்று போன உதிரம்

அவளை லிங்கம்மா என்றுதான்
அழைப்போம்.
சிறிது மனநலம் குன்றியவள்
அதனால்தான் எல்லோருக்கும்
அவள் ஆகிப்போனாள் .
கொடுத்தால் தின்பாள்
விரட்டினால் வீதிவழியே அலைவாள்
பழைய துணிகளைக் கொடுத்தால்
பொட்டலமாக்கி
வயிற்றோடு சேர்த்துக் கட்டி
சேலையால் மூடிக்கொள்வாள்.
"எப்படிப் போறா பாரு
நிறை மாசக் காரி மாதிரி"
இப்படித்தான் ஊரே பேசும்.
கண்மாய்க் கரையோரமிருந்த
வேப்பமரம்தான் அவளுக்கு எல்லாமே.
எப்போதாவது காக்காய்க் குளியல்
போடுவாள் போலும்.
அன்று வேறு பழைய துணி மாற்றியிருப்பாள்.
ஒருநாள் காலையில்
ஊரே திரண்டு அந்த வேப்பமரத்தின்
முன்னால் நின்று கொண்டிருந்தது.
லிங்கம்மா நிறைமாதக் கர்ப்பிணி போலவே
வயிறு பெருத்து தொங்கிக் கொண்டிருந்தாள்.
கழுத்தை இறுக்கிய சேலையை அறுத்து
கீழே கிடத்திவிட்டு
வயிற்றில் கட்டியிருந்த பொட்டலத்தை
அவிழ்த்து எறிவதற்காக
சேலையை விலக்கினார்கள்
பொட்டலம் அங்கு இல்லை.
மரத்தின் மீதிருந்த காக்கைகள்
கா..கா..வென கரைந்து கொண்டிருந்தன.
- உழவன்

4 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

சிகரம் பாரதி said...

நமது வலைத்தளம் : சிகரம் | பதிவர்கள் கவனிக்கவும் ! : முத்தான கவிதைகள் மூன்று..

fishapi said...

அருமை..வலி மிக்க கவி.வாழ்த்துக்கள்

அ. வேல்முருகன் said...

நிதர்சனங்கள்