Tuesday, November 24, 2009

இனிச்ச மரம்

எங்கள் ஊரில் ஒரு பெரிய புளியமரம் இருந்தது. அதற்கு இனிச்சமரம் என்றுதான் பெயர். அந்த மரத்திற்குப் பக்கத்தில்தான் நான் படித்த ஆரம்பப் பள்ளிக்கூடம். அங்கு படித்த காலத்தில், எல்லா சிறுவர் சிறுமியர்களுக்கும் பள்ளி நேரம் தவிர்த்த ஏனைய பகல் பொழுதுகள் எல்லாம் இந்த மரத்தடியில்தான். ஆரம்பக் கல்விக்குப் பின்னர் வேறுவேறு ஊர்களுக்குப் படிக்கச் செல்லும் நிலை ஏற்பட்டதால் முன்பு போல் இந்த மரத்தடிக்குச் செல்ல முடியாமல் போனது. எப்போதாவது விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டுக்கு வரும்போது, இந்த இனிச்சமரத்தடிக்குச் செல்வதுண்டு. மரத்தடியிலும் கிளைகளின் மீது ஏறியும் விளையாடிக் கொண்டிருக்கும் சிறார்களைக் கண்டு, தன் பழைய நினவுகளை அசைபோட்டுக்கொண்டே, காற்றிற்கு ஏதாவது பழம் விழுந்து கிடந்தால் எடுத்துச் சுவைத்துக்கொண்டு, பெருத்த மரத்தின் வேர்ப் பகுதியில் சிறிது நேரம் உட்காருவதுண்டு. சில நேரங்களில் மரத்தின் கிளைகளிலும்.

சென்னைக்கு வந்து குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டதால், அங்கெல்லாம் இப்போது செல்வது ஏறக்குறைய நின்றே போய்விட்டது. ஊருக்குப்போவதே வருடத்திற்கு இரண்டு மூன்று தடவைதான் என்றிருக்கும்போது இனிச்ச மரமெல்லாம் நினைவில் கூட இருப்பதில்லை.

போன வாரம் நண்பனொருவன் திருமணத்திற்காக ஊருக்குச் சென்றிருந்தேன். பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, எதிரே இருந்தவர் பரிமாறியவரைப் பார்த்து "என்ன மாப்ளே.. ரசத்துல புளிப்பே இல்ல. இனிச்சமரத்துப் பழம் போட்டாதான் புளிப்பே இருக்காது. ஆனா இப்ப இனிச்ச மரத்துப் பழமும் ஊருல இல்ல. பின்ன எப்படி ரசம் இப்படி இருக்கு" எனக் கேட்டார்.

"அட.. நம்ம இனிச்சமரம். இப்ப பழம் வேற இல்லேனு சொல்றாரு. அவ்வளவு வயசாச்சா அதுக்கு. போகும்போது பார்த்துவிட்டுதான் போகனும்" என முடிவு செய்தபின், பால்ய கால ஞாபகங்களோடு மரத்தின் திசைநோக்கி நடக்க ஆரம்பித்தேன்.


"சாய்ங்காலம் பள்ளிக்கூடம் விட்டா நேரா வீட்ட பாத்து வர்றதில்லை; பையைக்கூட வீட்டுல வைக்காம அப்படி என்ன விளையாட்டு வேண்டிக்கெடக்கு; ஓடுல வீட்டுக்கு" இனிச்ச மரத்திற்கே வந்து அடித்து அம்மா எத்தனை முறை அழைத்துப் போயிருப்பாள். பள்ளியிலிருந்து நேராக இங்கு ஓடி வந்து பழங்களையும், ஒதக்காய்களையும் பொறுக்கி கால்சட்டையின் இரண்டு பைகளையும் எத்தனை முறை நிறைத்திருப்பேன். ஒதக்காய் என்று சொல்லக்கூடிய பாதி மட்டுமே பழுத்த அந்த பழத்தின் ஒட்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து, ஒவ்வொரு கொட்டையாகக் கடித்து சப்பிக் கொண்டிருப்பவனைப் பார்க்கும்போது நம்மால் அவனிடன் கொஞ்சம் கேட்காமல் இருக்கவே முடியாது. அவனிடம் கெஞ்சி வாங்குவதற்குள் இரண்டு முறையாவது ஊறிய எச்சிலை விழுங்கியிருப்போம்.

காமராஜ் கொஞ்சம் வித்தியாசமானவன். இனிச்சமரத்துப் பழங்களைப் புத்தகப் பைக்குள் வைத்திருந்து, பதினோரு மணிக்கு விடப்படும் பத்து நிமிட இடைவேளையின் போது, ஒரு பழம் ஐந்து பைசா என்று விற்பான். அதுவும் விற்றுத் தீர்ந்துவிடும்.

எல்லாக் காலங்களிலும் புளியமரம் காய்ப்பதில்லை. இருப்பினும் மரத்தில் ஏறி விளையாட, கோலி, பம்பரம், ஊஞ்சல் என எல்லாவற்றிற்கும் எங்களுக்கு இந்த இனிச்சமரம்தான். "பள்ளிக்கூடத்த இனிச்ச மரத்துக்கு மாத்திட்டாங்களா?" என்று சொல்லுமளவிற்கு ஒட்டு மொத்த பள்ளிக்கூடமே மாலை வேளையில் இங்குதான் இருக்கும்.

பின்னால் இருந்து வந்த சைக்கிளின் மணியோசை, என் மனதினுள் விண்டோஸ் மீடியா பிளேயரில் ஓடிக்கொண்டிருந்த பழைய நினைவுகளை pause செய்தது. திரும்பிப் பார்த்தால் காமராஜ். "என்ன காமராஜ் புளி வியாபாரமா?" சைக்கிள் கேரியரைப் பார்த்துக் கொண்டே கேட்டேன். "ஆமாம்பா.. புளியோ பூண்டோ எது கெடச்சாலும் விக்க வேண்டியதான" சொல்லிக் கொண்டே சென்றுகொண்டிருந்தான் அதே காமராஜ்.

இதோ வந்துவிட்டது; பால்காரர் வீட்டை தாண்டியதும் வலப்பக்கம் திரும்பினால் இனிச்சமரம் கண்ணில் பட்டுவிடும். சற்று வேகமாகவே கால்கள் இயங்குகின்றன. "ஆஹா.. மரத்தக் காணோமே; அந்த இடத்துல பெரிய கட்டடம் ஒன்னு இருக்கு" இயங்கிய கால்கள் தயங்கி நிற்கின்றன. இனிச்சமரத்தையே வெட்டும் அளவிற்கு அப்படி என்ன அவசியம் வந்தது. அப்படி அது என்ன கட்டடம் என்றுதான் பார்த்து விடுவோமே என எண்ணியவாறே மெதுவாய் நடக்கிறேன். "பிரபாத் மேச் பாக்டரி" என எழுதப்பட்ட போர்டு இப்போது தெளிவாகத் தெரிகிறது. எட்டயபுரத்தில் தானே இந்த தீப்பெட்டி ஆபீஸ் இருந்தது. இப்போது இங்கும் ஆரம்பித்திருக்கிறார்களா. அருகினில் சென்று உள்ளே எட்டிப் பார்க்கிறேன். இப்போதும் அந்த இடத்தில் சிறுவர்கள்.

உழவன்

Wednesday, November 18, 2009

பிடித்ததெல்லாம் பிடித்ததுமல்ல; பிடிக்காததெல்லாம் பிடிக்காததுமல்ல

இப்போதெல்லாம் எதுவும் எழுதப்பிடிக்கவில்லை; எதுவும் எழுதத் தோணவுமில்லை. அப்படியே எழுதினாலும் அவைகளையெல்லாம் ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்ள மனம் இசையவில்லை. எனக்குப் பிடித்த என்னுடைய சில படைப்புகளெல்லாம் இப்போது எனக்குப் பிடிக்காமல் போய் அப்படியே தூங்கிக்கொண்டிருக்கின்றன. என் வாசிப்பு வட்டம் மைக்ரான் அளவிலாவது பெரிதாகிக் கொண்டே போகிறதோ; அதுதான் இதற்குக் காரணமோ என்ற எண்ணமும் கூட வருகிறது.

வாரத்திற்கொரு பதிவாவது போடவேண்டும் என்று தனக்குத்தானே போட்டுக்கொண்ட கட்டளையினால் எனக்குப் பிடிக்காமல் போன ஒரு சிலவற்றை வேறுவழியில்லாமல் பதிவிடும் சில சமயங்களில், நண்பர்கள் சிலருக்கு அது பிடித்தும் போகிறது. நண்பர்களாக இருப்பதனால்தான் அவர்களுக்குப் பிடிக்கிறதோ? இல்லை எனக்காக அவ்வாறு சொல்கிறார்களா? எந்த வாசகனுக்கு எது பிடிக்கும் என்ற சூத்திரம் தெரிந்தவன்தான் சிறந்த எழுத்தாளனாகிறான். அது எனக்கு எப்போது பிடிபடப் போகிறது?

சாத்தியமில்லாத ஒன்றைத் தன் கற்பனையால், அப்படி இப்படி என்று எழுதுவதெல்லாம் ஒரு கவிதையா? வாழ்க்கையை எழுதாமல் வேறு எதையெதையோ எழுதுகிறார்களே என்றெல்லாம் ஒரு கட்டத்தில் எண்ணியதுண்டு. அப்படிப்பட்ட படைப்புகளின் மீது மனம் லயிக்காமல் போனது. ஆனால் இப்போதெல்லாம் அவைகள் மிகப் பிடித்துப்போயின. அவைகளை எழுதுவதற்கு எவ்வளவு பெரிய கற்பனை வளம் வேண்டும். அவற்றையெல்லாம் வியக்கிறேன் இப்போது.

எனக்குத் தெரிந்த ஒரு பெண், பார்ப்பதற்கு அழகாக இருக்கமாட்டார். நனைந்த பனைமர நிறம். உடல்வாகும் ஒரு வடிவத்திற்குள் அடங்காது. அழகு என்பது இவருக்கு சற்று அதிகமான தூரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அவரைப் பார்க்கும்போது, இவளுக்கெல்லாம் எப்படி திருமணம் நடக்கப் போகிறதோ என்று எண்ணியதுண்டு. ஆனால் அவருக்கும் திருமணம் நடந்தது. அதுவும் காதல் திருமணம். மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனேன். அந்தப் பெண்ணை ஒருவன் ஆண்டுக் கணக்கில் காதலித்திருக்கிறான். அப்படியென்றால் ஒருவனுக்குப் பிடிக்காது போன ஒன்று, வேறு எவருக்கோ பிடிக்கிறது என்றுதானே பொருள்.

எனது அலுவலகத்தில் இரண்டு வேளை உணவு இலவசம்தான். மதிய உணவு 45 பைசா/ஒரு இட்லி 7 பைசா என்றால் இலவசம்தானே. ஒருநாள் காலையில் ஆபீஸ் கேண்டீனில் இட்லி சாப்பிட்டபோது, எனது நண்பனொருவன் இட்லிக்குத் தொட்டுக்கொள்ள வெறும் சர்க்கரை மட்டுமே வாங்கிக் கொண்டான். ஏனெனில் அவனுக்கு வடைகறி பிடிக்காதாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வந்தமர்ந்த இன்னொரு நண்பன் வடைகறியைக் கூடுதலாக வாங்கினான். அவனுக்கு வடைகறி ரொம்பப் பிடிக்குமாம். என்னடா இது! அவனுக்குப் பிடிப்பது இவனுக்குப் பிடிக்கவில்லை; இவனுக்குப் பிடிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.

இப்படி நிறைய ....

அதனால என்ன சொல்லவர்றேன்னா.. தலைப்ப இப்ப படியுங்க :-))

டிஸ்கி: யப்பா.. அமிர்தவர்ஷினி அம்மாவும், ஆ.ஞானசேகரன் அவர்களும் "பிடித்தது பிடிக்காதது" பற்றி ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் இருவரும் என்னை மன்னித்து, இதையே தொடர்பதிவாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். :-)
என்ன எழுதுறதுனே தெரியல; அதனாலதான் இப்படியொரு மொக்கை!!!

கடந்த வாரம் யூத்ஃபுல் விகடனின் முதல் மாத மின்னிதழ் வெளியானது அனைவரும் அறிந்ததே. அதில் என்னுடைய "சென்னை கிரிக்கெட்" எனும் கவிதையையும் வெளியிட்டமைக்கு யூத் விகடனுக்கு என் நன்றி! அக்கவிதையைப் படிக்க "இங்கே" கிளிக்கவும்.

உழவன்

Monday, November 9, 2009

உன் விரல் பிடித்து ...

சாலைக் கிண்ணங்களில்
தேங்கிய மழை நீரில்
முகம் பார்த்தபடி

குதிகால் தூக்கி
தாவித் தாவி நீ செல்லும்போது

திருவிழாவில்
எங்கே தவறிவிடுவோமோ
என்ற பயத்தில்
விரலை இறுகப் பற்றி நடக்கும்
குழந்தை போல

உன் கட்டை விரல் பற்றி
உன்னோடு பயணிக்கிறது
செருப்பு!

உழவன்

Wednesday, November 4, 2009

தீபாவளி நினைவுகள் - தொடர்பதிவு

1) உங்களைப் பற்றி சிறுகுறிப்பு?

பெயரில் மட்டுமல்ல; அடிப்படையில் நான் ஒரு உழவன். அவ்வளவே!
(நல்ல வேளை "சிறு" குறிப்பு என்று கேட்டீர்கள்)

2) தீபாவளி என்ற உடன் உங்கள் நினைவுக்கு வரும் (மறக்க முடியாத) சம்பவம்?

நான் ஒரு ரெட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருந்தேன். அந்த நேரத்தில் அது சற்று விலையுயர்ந்ததாக இருந்திருக்குமென நினைக்கிறேன். சில்வர் கலர்; நல்லா வெயிட்டாகவும் சற்று பெரியதாகவும் இருக்கும். அதில் ரோல் வெடியைச் லோடு செய்து விட்டு வெடிக்க ஆரம்பித்தால், ஒரே டமால் டமால் தான். எதுவும் மிஸ் ஆகாது. எனக்கு மிகவும் பிடித்த துப்பாக்கி அது. இரண்டு மூன்று வருடமாக அதை வைத்திருந்த ஞாபகம்.

எட்டோ ஒன்பதோ படிக்கும்போது என நினைக்கிறேன். என் அத்தை பையன் ஒருத்தன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்தான். எங்கள் வீட்டிலுள்ள ஒரு ரூமில் அடுக்குப் பானை இருக்கும். ஒவ்வொரு பானையிலும் ஊறுகாய், முருங்கை விதை, ஆமணக்கு முத்து.. இப்படி எதாவது ஒன்று இருக்கும். அதில் ஏதாவது ஒரு பானையில்தான் இந்த துப்பாக்கியை வைத்திருப்பேன்.

இவன் கண்ணுல எப்படி அந்த துப்பாக்கி பட்டதுனு தெரியல. எனக்கு அந்த துப்பாக்கிதான் வேணும்னு ஒரே அழுகை. நான் விடுவேனா என்ன. அந்த துப்பாக்கியைத் தரமாட்டேன்னு நானும் அடம் பிடிச்சு அழுகிறேன். அவன் என்னை விட சின்னப் பையன் வேற. அதனால அவனுக்குததான் சப்போர்ட் அதிகமா இருக்கு. என்ன எப்படி சமாதானப் படுத்துனாங்கனு சரியா ஞாபகம் இல்ல. கடைசியில அவந்தான் ஜெயித்தான். இப்பவும் தீபாவளிக்கு அந்த ரெட்டைக் குழல் துப்பாக்கியை நினைக்காமல் இருக்கமுடிவதில்லை.

டிஸ்கி: இவனை மாதிரியே நானும் இன்னொரு சொந்தக்காரங்க வீட்டுக்கு கெஸ்ட்டா போனபோது, அவங்க எனக்குக் கொடுத்தது :-)

3) 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்?

என் சொந்த ஊரில் தான் :-)

4) தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடப்படும் தீபாவளி பற்றி ஒரு சில வரிகள்?

தற்போது இருக்கும் சென்னையில் தீபாவளிக் கொண்டாட்டம் வெகு சிறப்பாகவே இருக்கும். அதற்கு சாட்சியாக நான் கண்டது வெடிகள்தான். தீபாவளிக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னரிலிருந்தே எங்கு பார்த்தாலும் வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும்.

ஆனால் எனது கிராமத்தில் இருக்கும்வரை இந்த தீபாவளியை ஒரு பெரிய பண்டிகையாகக் கருதியதே கிடையாது. நகரப் பக்கம் வந்த பின்புதான் ஓ.. இந்த அளவிற்கு தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்களா என்று வியந்தேன். அதற்குக் காரணமும் இருக்கிறது. தீபாவளிக்குத்தான் கிட்டத்தட்ட எல்லா தொழிலாளர்களுக்குமே போனஸ் கிடைக்கிறது. அதனால்தான் மற்ற பண்டிகைகளைவிட இது சற்று செழிப்பாகக் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் கூட போனஸ் வாங்குகிற குடும்பங்களில் மட்டும்தான் புத்தாடை இருக்கும்.

நன்கு மழை பெய்து, விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலத்தில்தான் இந்த தீபாவளிப் பண்டிகை வரும். தீபாவளியன்று காலையில் இட்லியைத் தின்றுவிட்டு, அதையே தூக்குவாளியில் மத்தியான சாப்பாடாக எடுத்துக்கொண்டு, உழுவதற்கும், களையெடுப்பதற்கும் காடுகளை நோக்கி என் மக்கள் விரைந்து கொண்டிருப்பதை நிறையப் பார்த்திருக்கிறேன். பெற்றோர்கள் காட்டிற்குச் சென்ற பின்பு, அவர்கள் கொடுத்து சில சில்லறைக் காசுகளூக்கு வெறும் பொட்டு வெடியை மட்டுமே வாங்கி வெடித்து விட்டு, வேறு யாராவது போடும் வெடிகளின் சத்தங்களை மட்டுமே கேட்டு மகிழ்ந்து கொண்டு, தீபாவளியை நிறைவு செய்யும் குழந்தைகள் இன்னமும் கிராமங்களில் இருக்கிறார்கள்.


5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்களா?

தீபாவளி நேரத்தில் தி.நகரின் கூட்ட நெரிசலை நினைத்துப் பார்த்தேன். மாம்பலம் ரயில்வே ஸ்டேசனில் இறங்கினால் போதும்; நம்மை தீபாவளிக்கூட்டமே அழைத்துக்கொண்டுபோய் ரங்கநாதன் தெருவில் விட்டுவிடும். அதனால் புத்தாடை எடுக்கவில்லை. இருந்தாலும் அகமதிக்கு எடுக்கவேண்டுமே. என் வீட்டின் அருகிலுள்ள ஒரு சிறிய கடையிலேயே அவளுக்கு மட்டும் ரெண்டு ட்ரெஸ் எடுத்தோம். அப்போது மனைவியும் புத்தாடை எடுத்துக்கொண்டார்.

6) உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்?

முறுக்கு, முந்திரிக்கொத்து, பாசிப் பருப்பு உருண்டை.. அதிரசம் செய்வதற்கான ராமெட்டீரியலில் ஒரு சின்ன டெக்னிக்கல் ப்ராபிளம். சோ அதிரசம் கேன்சல்.

7) உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள்? (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)

அமிர்தவர்ஷினி அம்மா அளித்த பதிலையே இந்த இடத்திலும் போட்டுக்கொள்ளவும்.

8) தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்து விடுவீர்களா?

இரண்டும் தான். ஆனால் என்னையே தொலைக்கின்ற அளவிற்கு எப்போதுமே தொலைக்காட்சி பார்ப்பதில்லை. நண்பர்கள் பத்து பதினைந்து பேர் சேர்ந்துவிட்டால் பெரும்பாலும் தீபாவளி ரிலீஸ் படங்களைப் பார்க்க செல்வதுண்டு. தொடர்ந்தாற்போல் இரண்டு படங்களையெல்லாம் பார்த்த அனுபவமும் உண்டு. இந்த தீபாவளிக்கு படம் பார்க்க செல்லவில்லை.

9) இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒரு சில வரிகள்? தொண்டு நிறூவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்?

சொல்லிக்கொள்ளும் அளவில் அப்படி பெரிதாய் எந்த உதவியும் யாருக்கும் செய்யவில்லை.

10) நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள்?

முத்துச்சரம் ராமலட்சுமி
அம்மா அப்பா ஞானசேகரன்
என் வானம் அமுதா
மனவிலாசம் நவாஸ்


"அகமதியோடு கொண்டாடிய தீபாவளியைப் பற்றி சொல்லுங்க" என அன்போடு என்னை தொடர் பதிவிற்கு அழைத்தமைக்காகவும், மற்றும் "Scrumptious blog award" கொடுத்து தனது மேலான அன்பினைப் பகிர்ந்து கொண்டமைக்காகவும் "அமிர்தவர்ஷினி அம்மா" வுக்கு நன்றிகள்.


அகமதியோடு நாங்கள் கொண்டாடும் முதல் தீபாவளி என்ற ஒரு சந்தோசம் தீபாவளிக்கு முன்னரே இருந்தது. அவள் ஆறு மாதக் குழந்தை என்பதால், பலமாக வெடிக்கும் வெடிகளை வீட்டின் முன்னால் வெடிக்கவில்லை. புஸ்வானம், தரைச்சக்கரம்.. போன்ற வெடிக்காது ஒளி தரும் வெடிகளைக் காட்டலாமென்றால், அதற்கும் வீட்டில் தடா. அதிலிருந்து கண் கூசும் அளவில் வெளிச்சம் வருமாம். மற்றபடி தீபாவளியன்று அவளுக்கு நாங்கள் எடுத்தது போக, எங்கள் வீட்டிலும் எடுத்த எல்லா புத்தாடையையும் போட்டு அழகு பார்த்து, மனம் லயித்து அவளோடு விளையாடிய நினைவுகள் நிறைய! ஒவ்வொருவரும் பெற்றோர்கள் ஆன பின்பு, அவர்கள் கொண்டாடும் எல்லா பண்டிகைகளுமே தங்களது குழந்தைகளுக்காகத்தான். அடுத்த தீபாவளிக்கு அவள் கையில் வெடியைக் கொடுத்து வெடிக்கச் சொல்லவேண்டும்.


அன்புடன்
உழவன்

Monday, October 26, 2009

ஒற்றைக் குருவி



தென்னங்கீற்று
பனையோலை
கம்மந்தட்டை
சோளத்தட்டை
ஓடு
சிமெண்ட்
பிளாஸ்டிக்
என
பலவிதமான
வீட்டுத் தலைகளில்
தாளமிட்டுப் பெய்யும்
மழையின் புதுயிசையை
உள் பூட்டிய வீட்டின்
மாடக்குழியிலிருந்து
ரசித்துக்கொண்டிருக்கிறது
ஒரேயொரு
சிட்டுக் குருவி மட்டும்!
 
உழவன்