Showing posts with label நவீன விருட்சம். Show all posts
Showing posts with label நவீன விருட்சம். Show all posts

Sunday, February 21, 2010

சாரை சாரையாய்...

ஒற்றையடிப் பாதையில்
சாரை சாரையாக
நேரும் எதிருமாகப் பரபரப்புடன்
சென்று கொண்டேயிருக்கிறார்கள்
சிலர் உணவுப் பொட்டலத்தோடு
எதிர்வரும் ஒவ்வொருவரையும்
கடக்கும்போதும் ஒரு விநாடி
ஏதோ பேசிக்கொள்கிறார்கள்
எங்கிருந்து வருகிறார்கள்
எங்கே போகிறார்கள்
எதுவும் புலப்படவில்லை
அறியும்பொருட்டு பின் தொடர்ந்தேன்
ஒரு இடத்தில்
பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.

இந்த ஆண்டிற்கான எட்டு கேசுவல் லீவில்
மீதமிருந்த இரண்டை
டிசம்பரில் எடுத்துத்
தூங்கிக் கழித்துக் கொண்டிருந்த
முதல் நாளில்தான் இவர்களைக் கண்டேன்.
எடுத்துவந்த விஷப்பொடியைத் தூக்கி எறிந்துவிட்டு
சிறிது சர்க்கரையை
அவர்களின் மேல் தூவிவிட்டு
அலுவலகம் புறபட்டுவிட்டேன்.

உழவன்

நன்றி: நவீன விருட்சம்

நன்றி உயிரோசை (12.04.2010)