Sunday, October 15, 2017

இழப்பு

எல்லாம் முடிந்தது. அம்மா (பாட்டி) தன் மூச்சை நிறுத்தி மூன்று நாட்கள் ஆகிவிட்டன.

எண்பது வயதைத் தாண்டி, எல்லா வாழ்வையும் வாழ்ந்து பார்த்தவள்தான் எனினும் கடைசி இரண்டு வருடங்கள் ஒரே படுக்கையில் வாடிவிட்டாள் .

பேருந்து நிலையத்தில் இந்த ஊருக்குப் போக எந்தப் பேருந்தில் போகவேண்டும் என அருகில் இருந்தவர்களிடம் கேட்டுக் கேட்டுப் போனவள், இந்தக் கூச்சத்திலிருந்து விடுபட, என்னைப் பள்ளிக்கு அனுப்பி எனக்காகக் காத்திருந்தவள். எனக்கு எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், நான் மூன்றாம் வகுப்பு படித்தபோதே எனக்கு நாற்பது ரூபாயில் வாட்ச் வாங்கிக் கொடுத்து, இனி நான் யாரிடமும் நேரம் கேட்கத் தேவையில்லை; பேருந்தின் போர்டு படித்துச் சொல்ல யாரையும் நாடவேண்டியதில்லை என பூரித்துச் சொன்னவள்.

இந்த ஆறடி உயரத்தின் ஆட்காட்டி விரலைப் பிடித்துக் கொண்டுதான் இந்த உலகைக் காண ஆரம்பித்தேன்.

அவளது தியாகம் இன்னமும் மனசைப் பிசைந்து கொண்டேயிருக்கிறது. அவளை நினைக்கும்போதெல்லாம் அழுகை இன்னமும் வெடித்துக் கிளம்பிக்கொண்டே இருக்கிறது. மருத்துவரால் கைவிரிக்கப்பட்ட புதன் மாலையிலிருந்து அவளின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றாய்க் குறைய ஆரம்பித்தன.

தலைமாட்டில் அமர்ந்துகொண்டு அம்மா அம்மா என அழுதுகொண்டு, வாயைப் பிரித்து கொஞ்சம் பாலை ஊற்றுவதெல்லாம் வரமா இல்லை சாபமா எனத் தெரியவில்லை.

இவர்கள் இல்லையென்றால் நான் இல்லை என்கிற இடத்தில் மூன்று பேர் இருந்தார்கள். இப்போது அதில் ஒருவர் இல்லை.

மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான் என்றாலும், ஆண்டு அனுபவித்தே வாழ்ந்து மறைந்திருக்கிறாள் என்பதே ஒரேயொரு ஆறுதல்.

மறைவு: 13.10.2017 வெள்ளி அதிகாலை 1.45

2 comments:

'பரிவை' சே.குமார் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

ஆழ்ந்த இரங்கல். அவருடைய ஆசிகள் என்றும் உங்களுக்குத் துணை இருக்கும்.