கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.01.2010) மாலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நுழைவு வாயிலில் நுழைந்து, பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடினால், ம்ஹூம். இரண்டு பைக்குளைச் சற்று விலக்கிவிட்டு, நடுவிலே சிலர் தங்களது பைக்குகளைச் செருகியிருந்தது தெரிந்தது. என்னடா இது எங்கு நிறுத்துவது என்றே தெரியவில்லையே எனக் குழப்பத்தோடு நிற்கையில், ஒருவர் தனது பைக்கை வெளியில் எடுக்கப் போவது கண்ணில் பட, உடனே அவரது பின்னால் சென்று நின்றுகொண்டேன். நிற்கிறேன்... நிற்கிறேன்... நின்றுகொண்டேயிருக்கிறேன். மனுசன் வண்டியை வெளியில் எடுத்தபாடில்லை. மிகவும் பொறுமையாக, பைக் சீட்டிலுள்ள தூசியைத் தட்டிவிட்டு, சைடு மிரர்களைச் சரிசெய்து, லைட்டா தலைசீவி.. ஒருவழியாய் சில நிமிடங்களுக்கு பின்பு பைக்கை வெளியில் எடுத்தார்.
பந்தியில் இடம் பிடிப்பதற்காக சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் சென்று நின்றுகொள்ளும் சம்பவமெல்லாம் ஞாபகத்திற்கு வந்துபோயின. அண்ணன் எப்ப போவான்; திண்ணை எப்ப காலியாகும்னு சொல்வாங்களே அதுமாதிரி. ஒரு வழியாக பைக்கை நிறுத்தி ஐந்து ரூபாய்க்கான டோக்கனை வாங்கிக்கொண்டு, புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டையும் பெறுக்கொண்டு உள் நுழைந்தேன்.
இன்னென்ன புத்தகங்களை வாங்கப் போகிறோம் என்ற முழுமையான திட்டமிடலெல்லாம் எதுவும் இல்லாவிட்டாலும், மனதிற்குள் சில புத்தகங்களை வாங்கவேண்டும் என நினைத்துக்கொண்டு, இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன்.
நான் எழுத ஆரம்பித்து இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை என்பதுதான் உண்மை. எழுதவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இன்னமும் நான் பதிலைத் தேடிக்கொண்டேதான் இருக்கிறேன். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் நடைபெறுகிற புத்தகக் கண்காட்சிக்கு நான் செல்வது இதுவே முதல்முறை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதற்கு முன்னர் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு இரண்டே இரண்டு முறை மட்டுமே சென்றிருக்கிறேன். முதல் முறை நண்பர்களோடு சென்றபோது, எதுவுமே வாங்காமல் செல்கிறோமே என்கிற எண்ணத்தால், காந்தியின் சத்திய சோதனை மட்டும் வாங்கிய ஞாபகம் - அதன் விலைதான் மிகக் குறைவு என்பதால் - முழுமையாகப் படிக்கப்படாமல் இன்னும் அந்தப் புத்தகம் என்னிடம் உள்ளது. மற்றுமொருமுறை சென்றபோது, என்னுடைய துறை சம்பந்தமான ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கினேன். (சோறு போடுறதே அதுதான.. )
யாரைக் கேட்டாலும் சரி. அவர்களது பால்ய காலத்தில் படித்த புத்தகத்தில் பொன்னியின் செல்வம் கண்டிப்பாக ஒன்றாக இருக்கிறது என்பதைப் பலரின் பதிவுகளிலிருந்து தெரிந்துகொண்டேன். சிறுவர் மலரையும் சொல்வார்கள். அதைக்கூட நான் படித்ததில்லை என்று சொல்லக்கூட சற்று வெட்கமாகத்தான் உள்ளது. ஆனால் வாரமலர், குடும்பமலர் போன்ற எந்தப் புத்தகத்தில் கவிதை இருந்தாலும் அதனை மட்டுமே படிக்கும் பழக்கம் இருந்தது. என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் சரி; கல்லூரி வாழ்க்கையிலும் சரி.. நூலகம் சென்று ஒரு புத்தகம் கூட எடுத்ததில்லை.
பல ஞாபகங்களோடு நடந்து செல்லும்போதுதான் "பொன்னியின் செல்வன்" கண்ணில் பட்டது. எத்தனை பேர் இப்புத்தகத்தைப் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்கள். நாமும் இதைப் படித்துப் பார்த்தாலென்ன என்கிற எண்ணம் வர, பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் வாங்கி இப்புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்தேன். மேலும் சில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு பதிப்பகம் பதிப்பகமாகச் கடந்து, உயிர்மை பதிப்பகத்திற்கு வந்தபோது, எஸ்ரா அவர்களும், மனுஷ்யபுத்திரன் அவர்களும் வெளியில் அமர்ந்திருந்தனர். சல்லிக்கட்டில் மாடு பிடிப்பதற்கான தில் நம்மிடம் இல்லையென்றாலும், மாடு பிடித்தவரைப் பார்க்கும்போது நமக்குள் ஒரு பிரமிப்பு, சந்தோசம் இருக்குமே. அந்த பிரமிப்போடு இவர்களைப் பார்த்துக்கொண்டே பதிப்பகத்தினுள் நுழைந்தேன். அங்கு நண்பர் விஜய மகேந்திரனைச் சந்திக்கமுடிந்தது. இவரது "நகரத்திற்கு வெளியே" எனும் சிறுகதைத் தொகுப்பை கடந்த டிசம்பர் 25ல் உயிர்மை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அங்குதான் முதன்முதலாக எஸ்ரா அவர்களையும், மனுஷ்யபுத்திரன் அவர்களையும் பார்த்தேன். இது இங்கு இரண்டாவது முறை.
அப்போது, வாருங்கள் மனுஷ்யபுத்திரனிடன் உங்களை அறிமுகம் செய்துவைக்கிறேன் என்று நண்பர் விஜய மகேந்திரன் என்னை அழைத்துச் சென்றார். "இவர் என் நண்பர்; உழவன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறார்" என்று அறிமுகம் செய்த உடன், "உழவன்.. இந்தப் பெயர் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறதே; உயிரோசையில் எழுதியிருக்கிறீர்களோ" என்று அவர் கேட்டதும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திளைத்துப் போனேன். அப்படியே "அதீதத்தின் ருசி" எனும் அவரது கவிதைப் புத்தகத்தில் கையெழுத்தும் பெற்றுக்கொண்டு, அருகினில் புன்னகைத்துக் கொண்டிருந்த எஸ்ரா அவர்களிடமும், அவரது "நகுலன் வீட்டில் யாருமில்லை" குறுங்கதைத் தொகுப்பில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன்.
சொல்லப்போனால், நான் நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதியவன் அல்ல. வெறும் இரண்டே இரண்டு கவிதைகள்தான் இதுவரை உயிரோசையில் வந்துள்ளது.
அக்கணத்திலிருந்து இக்கணம் வரை அந்த நிகழ்வை நினைத்து மகிழ்ந்துகொண்டே இருக்கும் இவ்வேளையில், இந்த வார உயிரோசையில் என்னுடைய
"க்கும்" கவிதையைக் கண்டபோது அம்மகிழ்ச்சி இன்னும் பன்மடங்கானது.
நன்றி திரு மனுஷ்யபுத்திரன் அவர்களே..
உழவன்