Showing posts with label உயிரோசை. Show all posts
Showing posts with label உயிரோசை. Show all posts

Tuesday, March 1, 2011

முத்தச் சில்லுகள் - உயிரோசை


சருமம் உறிந்ததுபோக மீந்த முத்தங்கள்
படுக்கையெங்கும் பனித்துளியாய் மின்னுகின்றன.
போர்வை உதறலில் தெறித்து விழுந்த சில முத்தங்கள்
கண்ணாடிச் சில்லுகளாய்ச் சிதறுவது
குழந்தையின் சிரிப்பை ஒத்திருக்க
கருவறை நிறைந்திட்ட பூரிப்பில்
அடிவயிற்றில் கைவைத்தவாறே செல்கிறாள்.

உழவன்

இவ்வார (28.02.2011) உயிரோசையில் இடம் பெற்றுள்ளது. உயிரோசைக்கு நன்றி

Wednesday, July 7, 2010

வெயில் புணரும் வீடு - உயிரோசை

பூக்களால் சூழப்பட்ட நிலத்தில்
மல்லாந்து படுத்திருக்கும் அவளின்
திரைச்சீலை திறந்து
முன்வாசல் வழியாய்
விரல் நுனியால் ஊர்ந்து
சிலிர்ப்பு மூட்டி
வரவேற்பறையில் விளையாடி
பலவகைப் பழச்சாற்றைப் பருகி
உண்டு களித்து
உள்ளும் புறமுமாய்
எதையெதையோ தேடி
எதையுமே எடுக்காது
ஒவ்வோர் அறையிலும் தன்னைப் புதைத்து
பின் வாசல் வழியாய்
வெளியேற முயற்சித்து
தோற்று
அவள் மேலேயே கவிழ்ந்து படுத்து
சிறிது உறங்கிப் பின் செல்கிறான்
கிழக்கிலிருந்து வந்த வெயிலன்!

உழவன்
நன்றி உயிரோசை

Tuesday, May 18, 2010

இந்த வார உயிரோசையில்...

இந்த வார உயிரோசையில் (17.05.2010) எனது கவிதையான "நானும் சிலந்திதான்" இடம்பெற்றுள்ளது.
உயிரோசைக்கு நன்றி.
 
கவிதையை எனது வலையில் படிக்க

உயிரோசையில் படிக்க


உழவன்

Sunday, May 9, 2010

நானும் சிலந்திதான் - உயிரோசை

கோணியோடு காலையிலேயே
கிளம்பி விடுவேன்
 
காலி தண்ணீர் பாக்கெட்டுகளும், பாட்டில்களும்
வீதியெங்கும் விரவிக் கிடக்கும்
 
கிளறிக் கொண்டிருக்கும்
நாய்களைத் துரத்துவது
இயலாத ஒன்றுதான்
அப்படிக் கிளரும்போது
உடைந்த பொம்மைகள் கிடைக்கும்
தனியாய்ப் பத்திரப்படுத்திக் கொள்வேன்
 
வார இறுதிகளில்
காலி மதுபாட்டில்கள் கிடைப்பது
அதிகரித்திருப்பது மகிழ்ச்சிதான்
ஆனால் நான் குடிப்பதில்லை
 
இப்போதெல்லாம் மருந்துப் பொருட்கள்தான்
நிறையக் கொட்டிக் கிடக்கின்றன
எதை எந்த வியாதிக்குச் சாப்பிடுவது
என்பது தெரியாததால் எதையுமே எடுப்பதில்லை
 
குப்பையில்லா நகரம் உருவாக்குவோம்
என்று யாராவது சொல்லும்போது,
வேறென்ன தெரியும் என
சுயகேள்வி கேட்டுக்கொள்வேன்
 
உங்களுக்கு குப்பை
சிலந்திக்கு அதுதானே உலகம்!
 
உழவன்

உயிரோசைக்கு நன்றி

உயிரோசையில் படிக்க

Sunday, February 21, 2010

சாரை சாரையாய்...

ஒற்றையடிப் பாதையில்
சாரை சாரையாக
நேரும் எதிருமாகப் பரபரப்புடன்
சென்று கொண்டேயிருக்கிறார்கள்
சிலர் உணவுப் பொட்டலத்தோடு
எதிர்வரும் ஒவ்வொருவரையும்
கடக்கும்போதும் ஒரு விநாடி
ஏதோ பேசிக்கொள்கிறார்கள்
எங்கிருந்து வருகிறார்கள்
எங்கே போகிறார்கள்
எதுவும் புலப்படவில்லை
அறியும்பொருட்டு பின் தொடர்ந்தேன்
ஒரு இடத்தில்
பலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்
யாரோ கொண்டுவந்த உணவை
யாரோ சாப்பிடுகிறார்களா இல்லை
இவ்வளவு பேரும் ஒரே குடும்பத்தார்களா
புரியவில்லை வியந்தேன்
சாப்பிட்டு முடித்த ஒருவன்
தண்ணீர் கூட குடிக்காமல்
எங்கோ ஓடுகிறான்.

இந்த ஆண்டிற்கான எட்டு கேசுவல் லீவில்
மீதமிருந்த இரண்டை
டிசம்பரில் எடுத்துத்
தூங்கிக் கழித்துக் கொண்டிருந்த
முதல் நாளில்தான் இவர்களைக் கண்டேன்.
எடுத்துவந்த விஷப்பொடியைத் தூக்கி எறிந்துவிட்டு
சிறிது சர்க்கரையை
அவர்களின் மேல் தூவிவிட்டு
அலுவலகம் புறபட்டுவிட்டேன்.

உழவன்

நன்றி: நவீன விருட்சம்

நன்றி உயிரோசை (12.04.2010)

Tuesday, January 5, 2010

நன்றி திரு மனுஷ்யபுத்திரன் அவர்களே..

கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.01.2010) மாலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். நுழைவு வாயிலில் நுழைந்து, பைக்கை நிறுத்துவதற்கு இடம் தேடினால், ம்ஹூம். இரண்டு பைக்குளைச் சற்று விலக்கிவிட்டு, நடுவிலே சிலர் தங்களது பைக்குகளைச் செருகியிருந்தது தெரிந்தது. என்னடா இது எங்கு நிறுத்துவது என்றே தெரியவில்லையே எனக் குழப்பத்தோடு நிற்கையில், ஒருவர் தனது பைக்கை வெளியில் எடுக்கப் போவது கண்ணில் பட, உடனே அவரது பின்னால் சென்று நின்றுகொண்டேன். நிற்கிறேன்... நிற்கிறேன்... நின்றுகொண்டேயிருக்கிறேன். மனுசன் வண்டியை வெளியில் எடுத்தபாடில்லை. மிகவும் பொறுமையாக, பைக் சீட்டிலுள்ள தூசியைத் தட்டிவிட்டு, சைடு மிரர்களைச் சரிசெய்து, லைட்டா தலைசீவி.. ஒருவழியாய் சில நிமிடங்களுக்கு பின்பு பைக்கை வெளியில் எடுத்தார்.

பந்தியில் இடம் பிடிப்பதற்காக சாப்பிட்டுக் கொண்டிருப்பவரின் பின்னால் சென்று நின்றுகொள்ளும் சம்பவமெல்லாம் ஞாபகத்திற்கு வந்துபோயின. அண்ணன் எப்ப போவான்; திண்ணை எப்ப காலியாகும்னு சொல்வாங்களே அதுமாதிரி. ஒரு வழியாக பைக்கை நிறுத்தி ஐந்து ரூபாய்க்கான டோக்கனை வாங்கிக்கொண்டு, புத்தகக் கண்காட்சிக்கான நுழைவுச் சீட்டையும் பெறுக்கொண்டு உள் நுழைந்தேன்.

இன்னென்ன புத்தகங்களை வாங்கப் போகிறோம் என்ற முழுமையான திட்டமிடலெல்லாம் எதுவும் இல்லாவிட்டாலும், மனதிற்குள் சில புத்தகங்களை வாங்கவேண்டும் என நினைத்துக்கொண்டு, இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றேன்.

நான் எழுத ஆரம்பித்து இன்னும் ஒரு ஆண்டு கூட ஆகவில்லை என்பதுதான் உண்மை. எழுதவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்ற கேள்விக்கு இன்னமும் நான் பதிலைத் தேடிக்கொண்டேதான் இருக்கிறேன். பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் நடைபெறுகிற புத்தகக் கண்காட்சிக்கு நான் செல்வது இதுவே முதல்முறை என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதற்கு முன்னர் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு இரண்டே இரண்டு முறை மட்டுமே சென்றிருக்கிறேன். முதல் முறை நண்பர்களோடு சென்றபோது, எதுவுமே வாங்காமல் செல்கிறோமே என்கிற எண்ணத்தால், காந்தியின் சத்திய சோதனை மட்டும் வாங்கிய ஞாபகம் - அதன் விலைதான் மிகக் குறைவு என்பதால் - முழுமையாகப் படிக்கப்படாமல் இன்னும் அந்தப் புத்தகம் என்னிடம் உள்ளது. மற்றுமொருமுறை சென்றபோது, என்னுடைய துறை சம்பந்தமான ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கினேன். (சோறு போடுறதே அதுதான.. )

யாரைக் கேட்டாலும் சரி. அவர்களது பால்ய காலத்தில் படித்த புத்தகத்தில் பொன்னியின் செல்வம் கண்டிப்பாக ஒன்றாக இருக்கிறது என்பதைப் பலரின் பதிவுகளிலிருந்து தெரிந்துகொண்டேன். சிறுவர் மலரையும் சொல்வார்கள். அதைக்கூட நான் படித்ததில்லை என்று சொல்லக்கூட சற்று வெட்கமாகத்தான் உள்ளது. ஆனால் வாரமலர், குடும்பமலர் போன்ற எந்தப் புத்தகத்தில் கவிதை இருந்தாலும் அதனை மட்டுமே படிக்கும் பழக்கம் இருந்தது. என்னுடைய பள்ளி வாழ்க்கையிலும் சரி; கல்லூரி வாழ்க்கையிலும் சரி.. நூலகம் சென்று ஒரு புத்தகம் கூட எடுத்ததில்லை.

பல ஞாபகங்களோடு நடந்து செல்லும்போதுதான் "பொன்னியின் செல்வன்" கண்ணில் பட்டது. எத்தனை பேர் இப்புத்தகத்தைப் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்கள். நாமும் இதைப் படித்துப் பார்த்தாலென்ன என்கிற எண்ணம் வர, பொன்னியின் செல்வனின் ஐந்து பாகங்களையும் வாங்கி இப்புத்தகக் கண்காட்சியைத் தொடர்ந்தேன். மேலும் சில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு பதிப்பகம் பதிப்பகமாகச் கடந்து, உயிர்மை பதிப்பகத்திற்கு வந்தபோது, எஸ்ரா அவர்களும், மனுஷ்யபுத்திரன் அவர்களும் வெளியில் அமர்ந்திருந்தனர். சல்லிக்கட்டில் மாடு பிடிப்பதற்கான தில் நம்மிடம் இல்லையென்றாலும், மாடு பிடித்தவரைப் பார்க்கும்போது நமக்குள் ஒரு பிரமிப்பு, சந்தோசம் இருக்குமே. அந்த பிரமிப்போடு இவர்களைப் பார்த்துக்கொண்டே பதிப்பகத்தினுள் நுழைந்தேன். அங்கு நண்பர் விஜய மகேந்திரனைச் சந்திக்கமுடிந்தது. இவரது "நகரத்திற்கு வெளியே" எனும் சிறுகதைத் தொகுப்பை கடந்த டிசம்பர் 25ல் உயிர்மை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அங்குதான் முதன்முதலாக எஸ்ரா அவர்களையும், மனுஷ்யபுத்திரன் அவர்களையும் பார்த்தேன். இது இங்கு இரண்டாவது முறை.

அப்போது, வாருங்கள் மனுஷ்யபுத்திரனிடன் உங்களை அறிமுகம் செய்துவைக்கிறேன் என்று நண்பர் விஜய மகேந்திரன் என்னை அழைத்துச் சென்றார். "இவர் என் நண்பர்; உழவன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கிறார்" என்று அறிமுகம் செய்த உடன், "உழவன்.. இந்தப் பெயர் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறதே; உயிரோசையில் எழுதியிருக்கிறீர்களோ" என்று அவர் கேட்டதும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் திளைத்துப் போனேன். அப்படியே "அதீதத்தின் ருசி" எனும் அவரது கவிதைப் புத்தகத்தில் கையெழுத்தும் பெற்றுக்கொண்டு, அருகினில் புன்னகைத்துக் கொண்டிருந்த எஸ்ரா அவர்களிடமும், அவரது "நகுலன் வீட்டில் யாருமில்லை" குறுங்கதைத் தொகுப்பில் கையெழுத்தும் வாங்கிக் கொண்டேன்.

சொல்லப்போனால், நான் நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதியவன் அல்ல. வெறும் இரண்டே இரண்டு கவிதைகள்தான் இதுவரை உயிரோசையில் வந்துள்ளது.
அக்கணத்திலிருந்து இக்கணம் வரை அந்த நிகழ்வை நினைத்து மகிழ்ந்துகொண்டே இருக்கும் இவ்வேளையில், இந்த வார உயிரோசையில் என்னுடைய "க்கும்" கவிதையைக் கண்டபோது அம்மகிழ்ச்சி இன்னும் பன்மடங்கானது.

நன்றி திரு மனுஷ்யபுத்திரன் அவர்களே..

உழவன்

Monday, October 5, 2009

எனக்கான விருந்தாளி - உயிரோசை

ஈரக் காற்றிறைத்தவனை
நிறுத்தி,
வாய்பிளந்து சொடக்கிட்டு
முறித்த சோம்பல்
ஆவியாய் வெளியேறுவதற்கேதுவாய்
என் வீட்டின்
பின் சன்னல் திறந்தேன்

குளிர்காற்று இதழ்குவித்து
மெலிதாய் முகத்திலூத
கணநேரம் கண்கள் சொருகிப்
பின் கண் திறந்தேன்

எதிர் வீட்டு வேம்பு
தன் கைகளில்
தேக்கிவைத்திருந்த துளிகளைச்
சிறு காற்று தட்டிவிட்டுச் செல்கிறது

நீ என்ன கொடுத்தாலும்
என் வீட்டில்
உனக்கு இடம் தர இயலாது
என்ற தன் இயலாமையை
விளக்கிக்கொண்டே
மண்புழுவோடு நகர்ந்து கொண்டிருக்கிறது
நத்தை

தொட்டியைச் சுற்றிலுமிருக்கும்
குப்பைகள்
அவனால் அழைத்துச் செல்லப்பட்டு
ஆங்காங்கே கைவிடப்பட்டிருக்கின்றன
குப்பை பொறுக்குபவன்
ஒருவேளை
இன்று பட்டினி கிடக்க நேரிடலாம்

வடக்கிலிருந்து
ஒரு கரும்பொதி
உருண்டு கொண்டிருப்பதை
அண்ணாந்து பார்த்தவாறே
மடித்த கருங்குடையோடு
மஞ்சள் சுடிதாரில்
ஒருத்தி செல்கிறாள்

எனக்கான விருந்தாளி
வந்ததுகூட அறியாமல்
பிணமாகவே கிடந்திருக்கிறேன்
நேற்றிரவு முழுதும்

முற்றத்தில்தான் இனி
என் இரவுகள்.
மறவாது
வந்துவிடு விளையாட!

உழவன்

இவ்வார உயிரோசையில் இக்கவிதை வெளியாகியுள்ளது. உயிரோசையில் படிக்க இங்கே சுட்டவும்.

விருப்பமிருப்பின் இப்படைப்பை "பூக்களிலிருந்து சில புத்தகங்கள்" எனும் நூலுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்.

Monday, August 31, 2009

"சுதந்திரம்" சிறுகுறிப்பு வரைக - உயிரோசையில் வெளியான கவிதை

பேரிலோவன்பட்டி
நல்லழகு நாடார் பள்ளியிலிருந்து
எங்கள் ஊரான
வேலிடுபட்டிக்கு நடந்து வருகையில்
ஒரேயொரு கழுதை மட்டும்
பொதியோடு தனியாகப்
போய்க்கொண்டிருப்பதைக்
கண்டோம்.

நானும், என்னோடு
எட்டாம் வகுப்பு பயிலும்
சுந்தரும்
ஏழாம் வகுப்பு கணேசனும்
கழுதையை மடக்கிப் பிடித்து
பொதியைத் தள்ளிவிட்டு
அதன் வாலில்
பனையோலையைக் கட்டிவிட
சிட்டாய்ப் பறந்த
கழுதையைக் கண்டு
மகிழ்ந்து கொண்டு,

காலையில்
சுதந்திர தின விழாவில்
வாங்கி டவுசரில்
போட்ட மிட்டாய்களின்
மீதத்தைத்
தின்று கொண்டே
கழுதைக்கு சுதந்திரம்
வாங்கித் தந்த பெருமையுடன்
வீடு வருகையில்,

என் அப்பா
அக்காவைத் திட்டிக்கொண்டிருந்தார்.
"பொம்பளப் புள்ளைகளுக்கு
இதுக்கு மேல என்ன
படிப்பு வேண்டிக்கெடக்கு
இன்னும் ரெண்டு மூனு மாசத்துக்குள்ள
நல்ல இடமா பார்க்கனும்"
என்று!

உழவன்

31.08.2009 அன்று உயிரோசையில் வெளியான கவிதை. உயிரோசைக்கு நன்றி