Friday, July 21, 2017

ஆண்பால் - பெண்பால் - தாய்ப்பால்

குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டே, பல்பொருள் அங்காடியில் தனக்கான பொருட்களை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்து செல்லும் பெண்மணியை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? மேற்கத்தியக் கலாச்சாரம் நம் கலாச்சாரத்தைவிட முற்றிலும் வேறுபட்டது. அது நமக்கு ஒத்துவராது என்றுதானே நாம் இன்னமும் கூறிக்கொண்டிருக்கிறோம்.

இங்கிருக்கும் பெண்கள் எப்போதும்  தன் உடையைச் சரிசெய்துகொண்டே இருப்பதைப் பார்த்ததேயில்லை. தன் உடலில் அங்கு தெரியக் கூடாது; இங்கு தெரியக்கூடாது என்று அதை மறைப்பதிலேயே தன் முழுக்கவனத்தையும் நாள்முழுக்க செலுத்துவதுமில்லை. அவர்கள் அவர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கான உடையை அவர்களே முடிவு செய்கிறார்கள். இங்கிருக்கும் யாரும் அதனைக் குறுகுறுவெனப் பார்ப்பதுமில்லை. இன்னும் சொல்லப்போனால், இங்கிருக்கும் வீதிகளிலும், பூங்காக்களிலும் நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். புணர்தலைத் தவிர.

இவை எல்லாவற்றையும் விட்டுவிடுவோம். இப்போது முதல் பத்தியின் முதல் வரிக்கு வாருங்கள். ஒரு மிகப் பெரிய பல்பொருள் அங்காடியில், டிராலியைத் தள்ளிக்கொண்டு தனக்கான பொருட்களை எடுத்துக் போட்டுக்கொண்டே வருகிறார்  ஒரு பெண். தன் மார்பில் தொட்டில் போன்று கட்டப்பட்ட ஒரு துணிக்குள்ளிருக்கும் கைக்குழந்தை  அன்னையின் திறந்த மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கிறது. போகிறவர் வருகிறவர் என யாரும் இதனை வேடிக்கை பார்க்கவில்லை. அவரவர் அவரவர் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய உயர்ந்த குணம். ஒரு சமூகத்தின் மேல் எவ்வளவு நம்பிக்கை இருந்திருந்தால் ஒரு பெண்ணால் இதுபோன்று பொதுவெளியில் குழந்தைக்குப் பாலூட்டமுடியும். இப்போதுதான் நாம் சானிட்டரி நாப்கினைப் பற்றியே பேச ஆரம்பித்திருக்கிறோம். இன்னும் நாம் வளரவேண்டிய உயரம் எவ்வளவோ இருக்கிறது.

இந்த விஷயத்தில் இச்சமூகம் நம்மைவிட எவ்வளவோ உயர்ந்ததாகவே இருக்கிறது. இங்கிருக்கும் அனைவரும் ஆண்கள், பெண்கள் என்கிற வேறுபாடின்றி அனைவரும் புகை பிடிக்கிறார்கள்; மது அருந்துகிறார்கள். இருந்துவிட்டுப் போகட்டும். இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் இவர்களிடம்  கற்க வேண்டியதும் நிறைய இருக்கிறது.

#இங்கிலாந்து_பயணம்

No comments: