Sunday, July 26, 2009

பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் . . .

உழுது போட்ட நிலத்துக்கு
உழவன் ஊட்டுவான்
உரமாக !

இருந்த இடத்திலேயே
காய்ந்து போனால்
எரிவேன் எருவாக !

வளையல் கையால்
வழிக்கப்பட்டு
குளிர் நீரோடு
கலந்திருப்பேன்
முற்றம் தெளிக்க !

முற்றத்தின் முதுகினிலே
இருவிரலால் மலரெழுதிய
கவிதையாம்
மாக்கோலத்தின் மையத்தில்
அமர்ந்திருப்பேன்
பூசணிப்பூ தாங்கும் கையாக !

கம்பு சோளக்
கதிர்கள் காயும்
களத்திலெழும் புழுதிபடிய
கரிசல்காட்டான்
கரைத்திருப்பான்
களம் தெளிக்க !

வீட்டுத்தோட்டத்தில் நட்டிய
முருங்கைக் கட்டைக்கு
மூதாட்டி வைத்திருப்பாள்
மருதாணியாக !

பிடித்து வைத்து
அருகம்புல் செருகிவைத்தால்
ஆவேன்
அவசர சாமியாக !

இப்படியெல்லாம் மட்டுமல்லாது
எப்படி எப்படியோ
பயன்பட்டிருப்பேன்
பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் !

மாநகரச் சாலை
ஓரத்தில் பிறந்ததாலே

உதிர்ந்துபோன
மரத்தின் முடிகளோடும்

கசக்கிப்போட்ட
மரத்தின் பேத்திகளோடும்

குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !

உழவன்

21 comments:

S.A. நவாஸுதீன் said...

மாட்டுசானத்தின் மனம் பேசும் மொழிகள் அருமை உழவரே

தமிழ் said...

அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல கற்பனை நண்பா

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
மாட்டுசானத்தின் மனம் பேசும் மொழிகள் அருமை உழவரே//
 
//திகழ்மிளிர்
அருமை//
 
நன்றி நண்பரே.

குடந்தை அன்புமணி said...

இடம் மாறிப் போனதில் அதன் இயல்புத் தன்மையே மாறிவிடுகிறது...

நல்லாருக்கு தோழரே.

sakthi said...

வித்தியாசமான சிந்தனை உழவரே

வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

//குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !//

ஆகா... அருமை நல்லாயிருக்கு தோழா

"உழவன்" "Uzhavan" said...

//ஜகதீஸ்வரன்
கவிதை நன்றாக உள்ளது. என் jackpoem.blogspot.com வருகை தாருங்கள். உங்களிடமிருந்து வருகின்ற கருத்துகள் என்னை மென்மேலும் வளர்க்கும் என்பதை மறவாதீர்கள்.
நன்றி... //

நன்றி நண்பா.. நிச்சயம் உங்கள் தளத்திற்கு வருகிறேன்.

"உழவன்" "Uzhavan" said...

//குடந்தை அன்புமணி
இடம் மாறிப் போனதில் அதன் இயல்புத் தன்மையே மாறிவிடுகிறது...
நல்லாருக்கு தோழரே. //

//கார்த்திகைப் பாண்டியன்
நல்ல கற்பனை நண்பா //

நன்றி தோழர்களே :-)

அமிர்தவர்ஷினி அம்மா said...

சாணிக்கும் முக்கியத்துவமா !

நல்ல கவிதை

"உழவன்" "Uzhavan" said...

//sakthi
வித்தியாசமான சிந்தனை உழவரே
வாழ்த்துக்கள்//

வாழ்த்துக்கு நன்றி தோழி.

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
ஆகா... அருமை நல்லாயிருக்கு தோழா //

நன்றி நண்பா.

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

மனித மனம் மட்டுமில்லை.மாட்டின் சாணம் கூட மறுபிறவி எடுக்க நினைப்பதே பட்டிக்காட்டின் பெருமை.

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
சாணிக்கும் முக்கியத்துவமா !
நல்ல கவிதை //
 
என்ன அமித்துமா இப்படி சொல்லிட்டீங்க. :-)
சாணி நம்ம வாழ்க்கையில எவ்வளவு முக்கியமான ஒன்னு. சாணி பற்றி ஒரு தனிப் பதிவே போடலாமே.

"உழவன்" "Uzhavan" said...

//துபாய் ராஜா
அருமை.அருமை.
மனித மனம் மட்டுமில்லை.மாட்டின் சாணம் கூட மறுபிறவி எடுக்க நினைப்பதே பட்டிக்காட்டின் பெருமை. //
 
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

உமா said...

மிக மிக அருமை.வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

//உமா
மிக மிக அருமை.வாழ்த்துக்கள். //
 
நன்றிங்க :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

//Starjan ( ஸ்டார்ஜன் )
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் //

மிக்க மகிழ்ச்சி நண்பர் ஸ்டார்ஜன் அவர்களே..

உங்களுக்கும் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

வெகு நன்று.

//மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !//

உண்மைதான், பட்டிக்காட்டில் கொண்டாடப் படுவது பட்டணத்தில் கேட்பாரற்று. நல்ல கவிதை.

PPattian said...

அழகு..