Sunday, October 12, 2014

ஆயுத பூஜை



வழக்கத்திற்கு மாறாக
அதிகாலையிலேயே எழுந்து
தன்னைச் சுத்தப்படுத்தத் தொடங்குகிறாள்
அடர்சிவப்பில் நகப்பூச்சு பூசிய
கால் மென்விரல்களிலிருந்து நீரூற்றுமவள்
இளஞ்சூடான நீரால்
தன் பிளவுகளிலிருந்து
மூர்க்க விரல்களின் தடங்களைத்
துடைத்தெறிகிறாள்
உச்சியிலிருந்து உருளும் நீருருண்டைகள்
கவ்வி இழுக்கப்பட்ட இதழ்களின் வலிகளை
ஆசுவாசப்படுத்துகின்றன
நறுமணம் கமழ வழிபாட்டுக்குத் தயாரான
தன்னுடலையே அவள்
தொட்டு வணங்குகிறபோது
வழிந்த இரு துளிக் கண்ணீர்
காம்பில்பட்டு வெம்மையாகி
அமிலமாய் நிலத்தில் வீழ்ந்து
ஆண்மையை எரிக்கிறது.

உழவன்

படம்: ஓவியர் மாருதி

No comments: