Thursday, December 4, 2008

மின் தட்டுப்பாடு

பள்ளிக் குழந்தைகள்
பாடம் படித்துக் கொள்ளட்டும்
சூரியனே..
உன் மாலைப் பொழுதை
சற்று நீட்டித்துக் கொள் !

வீட்டு பட்ஜெட்டில்
மெழுகு வர்த்தியின்
எண்ணிக்கையாவது
சற்றுக் குறையட்டும்
மின்மினிப் பூச்சிகளே
எங்கள் வீட்டிற்குள்
வந்து விளையாடுங்கள் !

எரியாத தெருவிளக்கின் அடியில்
எப்படி பூ விற்பாள்
எங்கள் ஊர் பூக்காரி ?
நிலாவே
அமாவாசையன்றும் கூட
சிறிது நேரம் வந்துவிட்டு போ !

எரியும் அடுப்பின் வெளிச்சத்தில்
எப்படி எங்களால்
ஒரு ருபாய் அரிசியில்
கல் பொறுக்க முடியும் ?
பூமிக் கூரையிலிருக்கும்
விண்மீனே .. எங்கள்
கூரை வீட்டுக்குள்ளும் வருவாயா?

இருக்கிறது என்பதற்காக


இருளைப் பகலாக்கி

விளையாட்டுப் போட்டி கண்டோம் !

குளிர் காலத்தில் கூட

குளிர் அறை கேட்டோம் !

முழத்துக்கொரு விளக்கு வைத்து

பொதுக்கூட்டம் போட்டோம் !

கொசு மட்டுமே நடமாடும்

நடு இரவில் கூட

விளக்கு வைத்து

விளம்பரப் பலகையை

மினுங்க வைத்தோம் !

அலங்கார விளக்குகள் நடுவே
அமைச்சரை அழைத்து வந்தோம் !

இருந்தது தீர்ந்ததால்
இருளாகிப் போனது இப்போது !

இயற்கையே ...
இருளைப் போக்க
நீ
வருவது எப்போது ?

1 comment:

Anonymous said...

illaaamai....iyalaamai..

vaeru enna seiya... iyarkaiyidam kai yaenthuvathai vida...
bask