Friday, October 24, 2008

தீபாவளி வாழ்த்துமடல் !

என்று வரும் என்று வரும் என்று
எதிர்பார்த்திருந்த நாளும் வந்ததே!
எல்லோர் வீட்டிலும் இனிய
தீப ஒளி பிறந்ததே!
 
கந்து வட்டியோ - இல்லை
கடன் அட்டையோ
செலவுகள் தந்தாலும்
உறவுகளோடு மகிழும் தருணமும் வந்ததே!
 
பரட்டைத் தலைகளைப்
பதப்படுத்தும் எண்ணெய்க் குளியலோடு
நரகாசூரனுக்குத் தவசம் கொண்டாடி
நாடெல்லாம் வெடி வெடிக்கும்
நன்னாளும் வந்ததே!
 
பட்டாசுச் சத்தங்கள் இடிகளானதோ
வெடிகளால் சூழும் புகை மேகமானதோ
அறியாது மயில்களும் ஆடுகிறதே!
 
மஞ்சள் வைத்த புத்தாடை
பகிர்ந்து உண்ணும் பலகாரம்
இருட்டினில் சிரிக்கும் மத்தாப்பு
இதயத்தில் தீபங்கள் ஏற்றட்டும்!
 
எங்கு வெடிக்குமோ
என்ற பீதியில் நாம்..
எப்போது நிற்குமோ
எதிர்பார்ப்பில் ஈழத்தமிழன்
 
உயிர் குடிக்கும் குண்டுச் சத்தங்கள் ஒழியட்டும்
உள்ளம் மகிழ்விக்கும் சரவெடிகள் வெடிக்கட்டும்!
 
இனிய தீப ஒளி வாழ்த்துக்கள்!
 
உழவன்
http://tamiluzhavan.blogspot.com
 
 
 

No comments: