Friday, December 17, 2010

விக்கிலீக்ஸில் தமிழ்மண ஓட்டு?

கடந்த கேணிக்கூட்டத்தில் (12.12.2010) கவிஞர் கல்யாண்ஜி கலந்துகொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்தே அடிக்கடி வெளியே வந்து வானத்தை நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன். மாலையில் மழை வந்துவிடுமோ என்ற பதற்றம் சிறிது இருந்துகொண்டேயிருந்தது. மழை எதிர்பார்ப்பிற்கிணங்க நடந்துகொண்டது கண்டு மகிழ்ச்சியே. மழை பெய்யாமல் போனதற்காக மகிழ்ந்தது இதுதான் முதல்முறை. சற்று வெட்கமாகத்தான் இருந்தது. மழையில் நனைந்துகொண்டு கல்யாண்ஜியைக் காணச் செல்லமுடியாமல் போகுமே என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம். திட்டமிட்டபடி மாலை 3.30கெல்லாம் ஞானி அவர்களின் வீட்டை அடைந்தேன். பிரபல எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் சந்திக்கமுடிந்தது. எஸ்.ரா அவர்களும் கலந்துகொண்டது கூடுதல் சிறப்பு. இயக்குநர் பாலுமகேந்திரன், நடிகர் சார்லி மற்றும் பாத்திமா பாபுவும் வந்திருந்தனர்.

கல்யாண்ஜி அவரது படைப்புகள் போலவே மிகவும் மென்மையாகப் பேசினார். இதுபோன்ற கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால் கூச்சம் இருப்பதாகச் சொன்னார். அவரது கைவிரல்களின் லேசான நடுக்கத்தைக் காணமுடிந்தது. பூக்களின் வாசனையும், மாட்டுச் சாணத்தின் வாடையும், சருகுகளின் சலசலப்பும், சகதியின் ஈரமும் என எல்லாமும் அவர் பேச்செங்கும் நிறைந்திருந்தது. கேணியிலேயே அவரால் வெளியிடப்பட்ட அவரது சிறுகதைத் தொகுப்பான "ஒளியிலே தெரிவது" (சந்தியா பதிப்பகம்) புத்தகத்தில் அவரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தேன். அவரது பேச்சுப் போலவே வெளியெங்கும் குளிர் நிறைந்திருந்த்து. தமிழ்ஸ்டுடியோ.காம் இணையத்தளத்தில் வண்ணதாசனின் பேச்சு ஒலி வடிவில் கிடைக்கிறது. வேண்டுமெனில் "இங்கே" கிளிக்கவும்.

*********************************************************************************

இந்த ஆண்டுக்கான (2010) தமிழ்மணவிருதுகளுக்கான இடுகைத் தெரிவுகள் ஆரம்பமாகிவிட்டன. பால் என்றாலே அது பாக்கெட்டில் வருவது; தண்ணீர் என்றால் அது பாட்டிலில் வருவது (எங்கோ யாரோ சொல்லக்கேட்டது. அநேகமாக ஜெமோவாக இருக்கும்) என்றுதான் இன்றைய குழந்தைகள் தெரிந்துவைத்திருக்கின்றன. அதுபோல ஓட்டு என்றாலே அதற்கு பணம் கொடுப்பார்கள் என்ற கலாச்சாரம் இப்போது வேரூன்றிவிட்டது. அதற்காக தமிழ்மணத்தில் ஓட்டுப்போடுவதற்காக பணம் எதிர்பார்க்காதீர்கள். எங்கள் குடும்பத்தில் யாரும் ஒருமுறை கூட மந்திரியாகவில்லை. அப்படியாகியிருந்தால் ஓட்டுக்கு ஆயிரம் ஐயாயிரம் எனக் கொடுக்க பணம் இருந்திருக்கும்.

சரி. பணம்தான் இல்லை. விளம்பரம் செய்தாவது ஓட்டுக்கேட்கலாம் என முடிவு செய்து உயிர்மை, காலச்சுவடு, அகநாழிகை என பதிவர்கள் அதிகம் வாசிக்கும் இதழ்களில் விளம்பரம் செய்யலாமா அல்லது உலகமே படிக்கும் விக்கிலீக்ஸில் கொடுக்கலாமா என நண்பரொருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தபோது, எங்களுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் காரித்துப்பினார். அவர் ஏன் துப்பினார் என்று தெரியவில்லை. ஆனால் அதனை நான் அபசகுனமாக எண்ணி அம்முடிவிலிருந்து குதித்துவிட்டேன். ஆதலால் நீங்களே கீழ்க்கண்ட பதிவுகளைப் படித்து, பிடித்திருந்தால் ஓட்டுப் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. ராசா வர்றான்..செம்ப எடுத்து உள்ள வை - அரசியல், சமூக விமர்சனங்கள்

2. டாக்டர் எக்ஸ் - செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்

3. மன்னிக்கவும் (கவிதை) - படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

*********************************************************************************

சமீபத்தில் நண்பர்களிடமிருந்து எனக்கு பார்வார்டு மெயிலாக ஒரு கவிதை வந்தது. அக்கவிதைக்குப் பொருந்தமாக ஒரு சில படங்களையும் யாரோ போட்டிருந்தார்கள். அதனைப் பார்த்தபோது ரொம்ப மகிழ்வாய் இருந்தது. அக்கவிதையை படிக்க "இங்கே" சொடுக்கவும்.

***********************************************************************************

வருகிற 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை, தேவநேயப்பாவணர் அரங்கில் உயிர்மை பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வுதானெனினும், இந்த ஆண்டின் விசேசம் என்னவெனில், நம் பதிவுலகத்தைச் சார்ந்த நண்பர்கள் பொன்.வாசுதேவன், நர்சிம் மற்றும் நிலாரசிகனின் கவிதைத் தொகுப்புகள் வெளியாக உள்ளன. அவர்களுக்கு அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்கள்.

***********************************************************************************

விக்கிலீக்ஸ் உலகெங்கும் கலக்கிக்கொண்டிருக்கிறதென்றால், ஸ்பெக்ட்ரம் இங்கே கலக்கிக்கொண்டிருக்கிறது. சிலரைக் கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. அரசியல்வாதிகளே பொறாமைப்படுகின்ற அளவில், நடைபெற்ற ஒரு வரலாற்று நிகழ்வு நாம் வாழும் காலத்தில் நடைபெற்றிருப்பது சிலருக்கு மகிழ்ச்சியளிக்கலாம்; சிலருக்கு வருத்தமளிக்கலாம். விரைவில் நீராராடியா என்ற ஒரு தேசியத்தலைவர் இந்தியாவுக்குக் கிடைக்கலாம். அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

சமீபத்திய மழையானது ஆளும் கட்சிக்கு ஆதரவு திரட்டித்தந்துள்ளது. தமிழகத்தின் எல்லா இடங்களையும் வெள்ள நிவாரணம் என்ற பெயரில் "கவர்" பண்ணுவதற்கு இது ஒரு வாய்ப்பு. வாழ்க ஜனநாயகம்!
இப்பதிவை எழுதிக்கொண்டிருந்தபோது வந்த மின்னஞ்சல் கீழே..

Einstein says : ..... "Everything is relative."

Karunanidhi says : "Relative is everything."

ஒரு ஜோக்:

மந்திரி: பாண்டியர் குலம் காக்கப் பிறந்த ராசா..
மன்னர்: மன்னானு சொல்லுய்யா. எல்லாரும் ஒருமாதிரியா பார்க்குறாங்க.

*********************************************************************************

5 comments:

ராமலக்ஷ்மி said...

கேணி கூட்டம்: நல்ல பகிர்வு.

தமிழ்மண ஓட்டு: // எங்கள் குடும்பத்தில் யாரும் ஒருமுறை கூட மந்திரியாகவில்லை.//

ரைட்டு:))!

[எல்லாம் நல்ல சகுனம்தான்.]

புத்தக வெளியீடு : நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்!

கடைசி ரெண்டு ஜோக்ஸ் : சூப்பர்:))!

அருமையான தொகுப்பு.

ராமலக்ஷ்மி said...

வெற்றிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:)!!!

Chitra said...

Einstein says : ..... "Everything is relative."

Karunanidhi says : "Relative is everything."


....ha,ha,ha,ha....

Anonymous said...

வாழ்த்துக்கள் கிருஷ்ணா..

"உழவன்" "Uzhavan" said...

@ ராமலக்ஷ்மி
@ Chitra
@தமிழரசி

நன்றி